Tuesday, March 31, 2009
பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து தலிபான்களின் பெயரை நீக்க கோரிக்கை
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 142 தீவிரவாதத் தலைவர்களின் பெயர்கள் ஐ.நா.வின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தலிபான் இயக்கத் தலைவர் முல்லா முகமது ஓமருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் விரும்புகிறார்.
எனவே, பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் அல்ஹைடா இயக்கத்தில் இடம்பெறாத தலிபான் தீவிரவாதிகளின் பெயரை தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென ஐ.நா.வுக்கு கார்சாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தூதரகம் உட்பட 103 நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல் திருட்டு; சீனா மீது குற்றச்சாட்டு
திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் உலகின் பல நாடுகளிலுள்ளன. இந்நிலையில் இந்த அலுவலக கணினிகளில் தகவல்கள் திருடப்படுவதாகவும் உளவு பார்க்கப்படுவதாகவும் தலாய்லாமா அமைப்பினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, இதுபற்றி விசாரணை நடத்துமாறு கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டது. அவர்கள் இத்தகைய சைபர் குற்றங்களைத் துப்பு துலக்குவதில் முன்அனுபவம் பெற்றவர்கள். அதன் அடிப்படையில் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சீனாவிலிருந்து செயற்படும் ஒரு கணினி உளவுக் கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 103 நாடுகளில் 1,295 கணினிகளில் இந்தக் கும்பல் ஊடுருவியுள்ளது. இதற்காக பிரத்தியேகமான மென்பொருளை இக்கும்பல் பயன்படுத்தி வருகிறது. கணினிகளில் திருட்டுத்தனமாகப் புகுந்து ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதுடன் அந்தக் கணினிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
தலாய்லாமாவை மட்டுமன்றி தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களை குறிவைத்து இக்கும்பல் இயங்கியுள்ளது. தற்போதும் வாரத்துக்கு 10இற்கும் அதிகமான புதிய கணினிகளில் இக்கும்பல் ஊடுருவி வருவதாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இந்தக் கும்பல் வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தின் கணினியிலும் ஊடுருவியுள்ளது. பன்னாட்டு (நேட்டோ) படைகளின் கணினியிலும் ஊடுருவியுள்ளது. ஆனால், அமெரிக்க அரசின் அலுவலக கணினிகளில் புகுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பல்வேறு நாட்டு தூதரகங்கள், வெளியுறவு அமைச்சகங்கள், அரச அலுவலகங்கள், இந்தியா, பிரசெல்ஸ், லண்டன், நியூயோர்க் ஆகிய இடங்களிலுள்ள தலாய்லாமா அலுவலக கணினிகள் ஆகியவற்றில் சீன கணினி உளவுக் கும்பல் ஊடுருவியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தக் கும்பலின் தகவல் திருட்டுக்கு சில ஆதாரங்களும் சிக்கியுள்ளன. உதாரணமாக ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரியை நேரில் வருமாறு தலாய்லாமா அலுவலகம் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தது. அதை மோப்பம் பிடித்த சீன அரசு இந்த அதிகாரியை தொடர்பு கொண்டு அங்கு செல்ல வேண்டாம் என்று கூறி தடுத்து விட்டது.
இருப்பினும் இந்த சைபர் குற்றத்தில் சீன அரசுக்கு தொடர்பு இல்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நியூயோர்க் நகரிலுள்ள சீன தூதரகச் செய்தித் தொடர்பாளரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் எவரும் பெரிதாக கவனம் எடுப்பதில்லை
கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி முழு அரச வளங்களையும் பயன்படுத்தி வரும் அரசாங்கம் புதிய உத்திகளைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது. தமது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் ஆட்களை பயமுறுத்தி அரசாங்கத்தின் சட்டத்துக்கு முரணான வேலைகளையும் அங்கீகரித்து ஆசீர்வதிக்கும் நிலை உருவாகி வருகிறது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மிரட்டல்களுக்கு ஒரு போதும் அடிபணியாது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு புக்கர் மண்டபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் மு.கா.தவிசாளருமான பசீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி எம்.பி.தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் எம்.பி. உட்பட பலரும் இக் கூட்டத்தில் உரையாற்றினர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
கடந்த வருடம் இதே தினம் நான் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தபோது என்னுடன் சேர்ந்து இரண்டு பேர் ராஜிநாமா செய்தார்கள். ஏனெனில், அன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒரு சவாலை எதிர்நோக்க வேண்டி இருந்தது.
எமது கட்சியில் இருந்து ஆட்களைப் பிடுங்கி எடுத்து விட்டு, முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார். இந்த சவால் கடைசி நேரத்தில் வந்த போது நாமும் தைரியமாக முடிவு எடுத்தோம். எமக்கு பாராளுமன்ற ஆசனங்கள் முக்கியமல்ல. இந்த அரசாங்கத்தின் சவாலை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திருகோணமலையில் போட்டியிட்டு சவால்களை முறியடித்தோம்.
பரந்த மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி ஒரு தீர்மானத்திற்கு வருகின்ற போது மனதுக்குள் எமக்கு ஒரு திருப்தியும் தைரியமும் வரும். இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுப்பதற்கு தைரியமான, பதவிகளை கூட தூக்கி எறிந்துவிட்டு வரக்கூடிய, எமக்கு என்றொரு கட்சியும் அதனை சார்ந்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்ற உணர்வு மிகப் பிரதானமானது.
கொழும்பு மாவட்டத்தில் நமது கட்சி 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மாகாண சபைத் தேர்தலிலும், மாநகர சபைத் தேர்தல்களிலும் சேர்ந்து போட்டியிட்டதே இல்லை. எனவே, இப்படியான ஒரு முடிவை இந்த மாகாண சபைத் தேர்தல் மாற்றுவதற்கான எந்த நிர்ப்பந்தமும் எமக்கு ஏற்படவில்லை.
எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பிறகு இம்மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தனை ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறது என்பது தான் முஸ்லிம்களின் தன்மானம், சுயகௌரவம் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் ஆத்திரமும், ஆவேசமும் இந்த அரசுக்கெதிராக இதன்மூலம் வெளிப்பட்டிருப்பதை சர்வதேச சமூகம் அறிந்து கொள்ளும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் மிகப் பலமாக இருக்கிறது. நான்கு மாநகர சபை உறுப்பினர்களை வைத்திருக்கிறோம். 2 மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் வைத்திருக்கிறோம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பற்றி சர்வதேச ரீதியாக எவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இது குறித்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்காக இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கலுக்கு போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அந்தளவுக்கு தமிழ் நாட்டில் அப்படி ஒரு அழுத்தம். இதுவரை 12 பேர் தற்கொலை புரிந்துள்ளார்கள்.
பல தடவைகள் டெல்லிக்கு போயுள்ள நான் அந்தக் கட்சியுடனும், அரசின் மேல் மட்ட உறுப்பினர்களுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். மன்மோகன் சிங் இலங்கை வந்த போது சந்தித்து எமது பிரச்சினை குறித்துப் பேசியிருக்கிறோம். ஆனால், எமது பிரச்சினைகளை இன்னும் கறுப்புக் கண்ணாடியோடு தான் பார்க்கிறார்கள்.
எனவே, முஸ்லிம்களாகிய எமது பிரச்சினை வெறுமனே இலங்கையில் இருந்து மட்டும் தீர்க்கப்படும் பிரச்சினை அல்ல. அது நாட்டு எல்லை கடந்து போன ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது.
அண்மையில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்தோம். சகல தமிழ் கட்சிகளையும் அழைத்திருந்தார்கள். ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றியிருந்தேன். அதற்குப் பிறகே சற்று அவசரப்படுத்தி எமக்கான அழைப்பு தொலை நகலில் வந்தது.
"தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கூப்பிட்டிருக்கிறீர்கள். சம்பந்தன் எம்.பி.ஒரு மூத்த தமிழ்த் தலைவர். 50 களில் இருந்து தமிழரசுக் கட்சியோடு இருந்த மிக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஒருவரை இந்த அரசின் ஜனாதிபதி அழைத்தது ஜனாதிபதி மாளிகைக்கு அல்ல 4 ஆவது மாடிக்கு வருமாறு சீ.ஐ.டி. அழைத்திருந்தது' என்று நான் விமர்சித்திருந்தேன்.
பயமுறுத்தி அடிபணிய வைக்கிற மாதிரியான இந்த அழைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டிருந்தது. கட்சியை அழைக்கவில்லை. ஆனால், எம்.பி.மாரை அழைக்கிறார்கள்.
இந்த அரசு இன்று வாழ்வதே மற்றைய கட்சிகளின் எம்.பி.மார்களை பிடுங்கியே, ஜனாதிபதியின் கட்சிக்கு சரியாக 56 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் தேவை என்றால் ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாம். ஆனால், பயம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது இருக்கிற தொகை இரண்டு மடங்காகிவிடும். முஸ்லிம் காங்கிரஸ் பழைய நிலைக்கு வந்துவிடும் என்ற பயம். எனவேதான், பாராளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவில்லை.
அடுத்து வரவுள்ள சில ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டை நினைவு கூற இருக்கிறோம். 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பெரிய இனக் கலவரத்தின் நூற்றாண்டு ஆகும். 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய கலவரம் இந்நாட்டில் நடந்தது. 1956 இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த இந்தக் கலவரத்தின்போது முஸ்லிம்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கலவரத்தின் அடிப்படையே முஸ்லிம்களின் வணிகச் செழிப்பின் மீது கொண்ட பொறாமையாகும். அது இன்று வரை முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
முஸ்லிம்களாகிய எமக்கு இவ்வளவு நடந்தும் நாம் இன்னும் வன்முறைக்குப் போகவில்லை. நாங்கள் இன்னும் ஜனநாயக ரீதியில்தான் போராடி வருகிறோம். இல்லாவிட்டால் எப்போதோ முஸ்லிம்களும் ஆயுதம் தூக்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
லாகூர் பொலிஸ் பயிற்சி கல்லூரி மீது தாக்குதல் 7 மணிநேரம் போராடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த படையினர்
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கூரை மீது நின்றவாறு வானத்தை நோக்கி சுட்டு பாதுகாப்பு படையினர் வெற்றி ஆரவாரமிட்டதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
தாக்குதல் நடத்தியவர்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தாக்குதல் நடத்திய ஏனைய 11 பேரினதும் அவர்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்த 35 பேரினதும் நிலைமை தொடர்பாக இன்னமும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணிமீது இம்மாத முற்பகுதியில் தாக்குதல் இடம்பெற்ற பாகிஸ்தானின் லாகூர் நகரத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.
இச்சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கமாண்டோ பாணியிலான இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 11 பொலிஸ் அதிகாரிகள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கும் இதற்கும் இடையில் ஒத்த தன்மைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரு சம்பவங்களிலுமே நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் துப்பாக்கிகள், கிரனேட்டுகள், ரொக்கட் லோஞ்ஜர்களுடன் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில் தாக்குதல் நடத்திய சகல தீவிரவாதிகளும் காயமேதும் இல்லாமல் தப்பிச் சென்றுவிட்டனர். ஆனால், நேற்றுத் தாக்குதல் நடத்தியோர் தப்பியோட முயற்சித்ததாக தோன்றவில்லை. பயிற்சிக் கல்லூரியில் தொடர்ந்து உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
நேற்று தாக்குதல் நடத்தியோர் 8 இற்கும் 20 இக்கும் இடைப்பட்ட தொகையினர் என்று கூறப்படுகிறது. அதிகளவு ஆயுதங்களுடன் அவர்கள் வந்து மோதியதாகவும் சிலர் பொலிஸ் சீருடையில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சிக் கல்லூரிக்குள் தீவிரவாதிகள் இருந்தபோது இராணுவமும் பொலிஸாரும் அங்கு வந்து முற்றுகையிட்டிருப்பதாகவும் பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் ராசீர் நேற்றுப்பகல் தெரிவித்துள்ளார். பொலிஸாரும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளை அங்கு நிறுத்தியிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஸ்தாக்சீ சுக்ஜேரா கூறியுள்ளார்.
பொலிஸ் படையணிக்கு சேர்க்கப்பட்டோருக்கு காலை 8.50 மணிவரை காலைப் பயிற்சி அளிக்கப்படுவது அங்கு வழமையாகும். அந்த நேரத்தில் காலை 7.20 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
10,12 பயங்கரவாதிகள் காணப்பட்டனர். அவர்களில் அரைவாசிபேர் பொலிஸ் சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் விளையாட்டு நேரத்தில் அணியும் உடையுடன் காணப்பட்டனர். தோல்களில் பைகளை வைத்திருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி அம்ஜாத் அகமட் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் இரு அணிகளாக அணிவகுப்பு இடம்பெறும் மைதானத்திற்கு வந்ததாகவும் காலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை துப்பாக்கிதாரிகள் நான்கு முனைகளில் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவ இடத்திலிருந்த பொலிஸ் அதிகாரி "த ரைம்ஸ்' செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.
முதலில் அவருக்கு மேலாக கிரேனெட் ஒன்று வந்து வீழ்ந்தது. பின்னர் ஏழு அல்லது எட்டுப் பேர் உட்புறமாக வந்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர் என்று இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயிற்சி பொலிஸ்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Saturday, March 28, 2009
முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?
பெரியார் பேசுகிறார்
இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I
('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)
தோழர்களே!
எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.
இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.
இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.
ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.
இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.
இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.
இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.
இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.
ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.
இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.
அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.
சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.
சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!
எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?
தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!– தொடரும்.....